குழந்தைகள் காணாமல் போவது அதிகரிப்பு: விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியானது. 2014ம் ஆண்டு 441 குழந்தைகள் காணாமல் போனதாகவும், 2015ல் இந்த எண்ணிக்கை 656 ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னையில் 2014ம் ஆண்டு 114 குழந்தைகள் காணமல் போனதாகவும், கடந்த ஆண்டு 71 பெண் குழந்தைகள் உள்பட 149 குழந்தைகள் காணாமல் போனதாகவும், இந்த ஆண்டு இதுவரை 58 குழந்தைகள் மாயமாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் தமிழத்தில் தான் அதிக அளவில் குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வறுமையான குடும்ப பின்னணி கொண்டவர்கள் எனவும், இவர்களை மீட்பதில், தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications