நீலகிரியில் "கிலி"யில் நடுங்கும் புலிகள்.. உடம்புல சின்ன கீறல்கூட இல்லையாமே..சாப்பாட்டில் விஷமா? ஐயோ
ஊட்டி: நீலகிரியில் 2 புலிகள் இறந்துள்ளது தொடர்பான விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. அத்துடன், பொதுமக்களின் கோரிக்கை ஒன்றும், பலரது கவனத்தை பெற்று வருகிறது.
2 வருடங்களுக்கு முன்பு, நீலகிரியில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்துவிட்டது.. விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.

சாம்பார் சாதம்: அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும்.. சாம்பார் சாதம் சாப்பிட்டதால்தான் புலி இறந்துவிட்டதாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது சாம்பார் சாதத்தில், விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் விஷயங்கள் பரவின.
எனினும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேறு விதமாக வந்தது.. அப்போது, பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது.அது என்னவென்றே தெரியாமல் புலி சாப்பிட்டிருக்கிறது. வயிற்றுக்குள் சென்ற பிளேடு நாளுக்கு நாள் வயிற்றை குத்தி கிழித்து வந்த நிலையில், புலி இறந்திருக்கிறது. ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது...
விஷம் வைத்து கொலை?: ஆனால், விஷம் வைக்கப்பட்டு, நிறைய புலிகள் கொல்லப்படுவதாக அப்போதிருந்தே தகவல்கள் பரவியபடியே உள்ளன. இந்த ஒரே மாதத்தில் மட்டும் 6 புலிகள் இறந்திருக்கின்றன.. இவைகள் எல்லாம் எப்படி இறந்தன என்றே இதுவரை தெரியவில்லை.. நேற்று முன்தினமும் 2 புலிகள் அவலாஞ்சி வனப்பகுதியில் இறந்துள்ளன..
பொதுவாக, வனப்பகுதியில் வனவிலங்குகளுடன் நடக்கும் மோதல்கள், மற்றும் நோய்கள் காரணமாக, விலங்குகள் இறக்கலாம். ஆனால், மர்மான முறையில் இவைகள் இறந்துவருவது சந்தேகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
காயங்கள் இல்லை: அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை உள்ளது.. இந்த நீரோடைக்கு பக்கத்தில்தான், காட்டுப்பகுதியும் உள்ளது.. நேற்றுமுன்தினம், புலிகள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததுமே, அதிகாரிகள் நேரடியாக சென்று பார்த்தபோது, அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. இன்னொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்துள்ளது..
அதாவது, ஒரு பெண் புலி வாய்க்காலிலும், இன்னொரு புலி வாய்க்காலின் மேல் கரையிலும் இறந்து கிடந்தன.
2 புலிகளுமே இறந்து 2 நாள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.. 2 புலிகளின் உடல்களுமே அழுகிய நிலையில் இருந்துள்ளன.. புலிகளின் உடம்பில் காயங்களும் எதுவும் இல்லை. அதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்கிறார்கள் வனத்துறையினர்..
காட்டு விலங்குகள்: நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. காட்டு விலங்குகளை கொன்று, அவைகளை அவர்கள் தங்கள் ஊருக்குள் எடுத்து சென்று விற்பனையும் செய்து வருகிறார்களாம்.. புலியின் தோல், பற்கள் போன்றவை மதிப்பு வாய்ந்தது என்பதால், வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள்.
விஷம் : இப்போதைக்கு 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தை சுற்றியும் ஆய்வு செய்து வருகிறது.. அநேகமாக 2 புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று கள ஆய்வில் முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.. ஆனால், எப்படி விஷம் கலந்தது என்றுதான் தெரியவில்லையாம்.. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதலின்படி, பிரேத பரிசோதனை நடந்துள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே, புலிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
ஆனால், ஒவ்வொரு முறையும், புலிகள் இறந்துவிட்டால், உடனடியாக அந்த சடலம் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.. போஸ்ட் மார்ட்டம் முடிந்தால்தான், புலி இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் சொன்னாலும், பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதில்லை என்கிற புகார் கிளம்பி உள்ளது..
சந்தேகங்கள்: அதுமட்டுமல்ல, ஏற்கனவே 6 புலிகள் இறந்துவிட்டன.. இப்போது, தண்ணீர் குடிக்க வந்த 2 புலிகளும் இறந்துள்ளது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளதாகவும், இதுகுறித்து மாநில வனத்துறை தனிக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை எழுப்பி உள்ளனர். எனினும், புலிகள் எப்படி இறந்தன என்பது குறித்து, விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications