நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி கட்சியில் இருந்து திடீர் நீக்கம்
சென்னை: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட குருமூர்த்தி கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட கட்சி சின்னத்திற்கான ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்க தவறிய காரணத்தால் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் வாய்ப்பு இழக்கப்பட்டது.
இது குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் மாநில தலைவர் கே.என். லட்சுமணனும், மாநில பொது செயலாளர் (அமைப்பு) எஸ்.மோகன்ராஜுலுவும், மாநில செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய மூவர் குழு இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்கியுள்ளார்கள்.
இதற்கு காரணமான குருமூர்த்தியையும், அவருக்கு தலைமை முகவராக செயல்பட்டு உரிய நேரத்தில் ஆவணங்களை கொடுக்க தவறிய வரதராஜனும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மேற்கொண்டு விசாரித்து இறுதி அறிக்கையினை மாநில தலைமைக்கு வழங்கும். அதனடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.