மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மையா?.. யாருக்காக செய்தார்? நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மைதான் என நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
46 வயதாகும் நிர்மலாதேவி, தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பும் பயின்றதோடு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் பயின்ற தேவாங்கர் கலைக் கல்லூரியில் கடந்த 3-01-2008 ம் நாளில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி பேராசிரியையாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

4 மாணவிகள் புகார்
இவர் கடந்த மார்ச் 14-ம் தேதி இரண்டாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக வற்புறுத்தி தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர்.

சிபிசிஐடி விசாரணை
இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.

விசாரணை நடத்தியது
இந்த புகார் தொடர்பாக ஆய்வு மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிர்மலா தேவியை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

160 சாட்சிகள்
இதுதொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி லாவண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பாதிக்கபபட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிர்மலா தேவியின் பேச்சுக்களை சிடிகளாக மாற்றியுள்ளதாகவும் 160 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்
மேலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி ஒப்புகொண்டார். முருகுன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதி பரிந்துரை
கைது செய்யப்பட்ட 3 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு சிம் கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு பரிந்துரைத்தது.

சிறப்பு வழக்கறிஞர்
இதுதவிர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிர்மலா தேவியின் குரல் மாதிரி சென்னை, மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications