நிர்மலாதேவி விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில் 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்!
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர். நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.
நிர்மலாதேவி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் இருந்ததால் பிரச்சனை பெரிதானது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். அதே சமயம் இதில் பெண் உறுப்பினர்களை நியமிக்க விரும்பினால் சந்தானம் நியமித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த குழு மதுரையில் விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தானம் கமிஷனுக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அன்னை தெரசா பல்கலை. பேராசிரியை கமலி, வேளாண்கல்லூரி பேராசிரியை தியாகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
மாணவிகளிடம் விசாரணை நடத்த வசதியாக பெண் பேராசிரியைகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மதுரையில் சந்தானம் பேட்டி அளித்துள்ளார். இதில் மாணவிகளிடம் எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என்றுள்ளார். மேலும் நிர்மலா தேவி விவகாரம் பற்றி விவரம் தெரிந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.