புதிய ஊதிய ஒப்பந்தம்...என்.எல்.சி. தொழிலாளர்களின் 39 நாள் ஸ்டிரைக் தற்காலிகமாக 'வாபஸ்'
நெய்வேலி: புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் கடந்த 39 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு 2012ஆம் ஆண்டு புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த மாதம் என்.எல்.சி. நிறுவன நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுடன் ஒப்பந்த தொழிலாளர்களும் கை கோர்த்தனர்.
மேலும் என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா 2 முறை கடிதங்கள் எழுதியிருந்தார்.
அத்துடன் அ.தி.மு.க.வின் 44 எம்.பி.க்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த 39 நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தின் இடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று நெய்வேலியில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தற்போதைய போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் அனைத்துத் தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications