சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? இல்லவே இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக ஆந்திரா அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது ஆந்திரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செம்மரக் கடத்தலுக்கு பின் உள்ள முக்கிய புள்ளிகளை கண்டுபிடிக்க வேண்டும். புதிதாக உருவாகியுள்ள ஜனதா கூட்டணி சந்தர்ப்பாவத கூட்டணி. அதனால் அந்த கூட்டணி விரைவில் உடையும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 33 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக வலுவடைந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் எப்பொழுது நடந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்குள் பல கருத்துகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பேசி இறுதி முடிவு செய்யப்படும். சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications