திமுக- பாஜக கூட்டணி என்பது வெறும் வதந்தியே... மு.க.ஸ்டாலின்
திருச்சி-திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகில் தி.மு.க.வின் 10-வது மாநில மாநாடு 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மாநாட்டு மேடை, தலைவர்கள் தங்குவதற்காக தனித்தனி குடில்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டு பணிகளை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமையன்று 4-வது முறையாக பார்வையிட்டார்.
பின்னர் மாநாட்டு மேடையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:- திருச்சி தி.மு.க மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள்? எந்தவிதமான திருப்பு முனையை இந்த மாநாடு தரும் என கூற முடியுமா?
பதில்:- நீங்கள் எதிர்பார்க்கும் திருப்புமுனை நிச்சயம் இருக்கும்.
கேள்வி:- திருச்சி மாநாட்டுக்கு முன்பாக தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வந்து விடுமா?
பதில்:- வந்தால் உங்களுக்கு தெரியாமல் இருக்காது.
கேள்வி:- தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஏற்படும் என பேசப்படுகிறதே?
பதில்:- யார் சொன்னது? இது வேண்டும் என்றே திட்டமிட்டு சிலர் பரப்பும் வதந்தியாகும். சில பத்திரிகைகளிலும் வேண்டும் என்றே இப்படி எழுதுகிறார்கள்.
கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் வேறு ஏதாவது கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? கூட்டணி கட்சிகளுக்காக தி.மு.க. கதவு இன்னும் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறதா?
பதில்:- ஏற்கனவே தலைவர் இதுபற்றி தெளிவாக கூறி இருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் உள்ளன. மேலும் கட்சிகள் வந்தால் தலைவர் கருணாநிதி முறைப்படி அறிவிப்பார்.
கேள்வி:- கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா?
பதில்:- தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் உள்ளவர்கள் இதுபற்றி பேசி முடித்து தலைவரிடம் தெரிவிப்பார்கள். தலைவர் இறுதியாக முடிவை அறிவிப்பார் என்றார் ஸ்டாலின்.