திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி- முக.ஸ்டாலின்
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சிதான் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., பொருளாளர் மு.க.,ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அவருக்கு, தமிழக எல்லையான களியக்காவிளையில், காலை 10:00 மணிக்கு, குமரி மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் ஸ்டாலின் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்ய வேண்டாம் கடந்த 9 மாதத்திற்கு முன்பே கூட்டணி முறிந்துவிட்டது.

அரசியல் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒரு மரபு. தேர்தல் கூட்டணி அமைவதற்கும் அதற்கும் தொடர்பில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பது திமுகப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை எடுத்து உரைத்து இருக்கிறார்.
அதேசமயம் தற்போதுள்ள கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி தொடரும். கூட்டணியில் மேலும் பல புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார். எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சிதான். தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணிகள் குறித்து தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று திமுக பொதுக்குழுவின் கருணாநிதி அறிவித்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
இதனால் திமுக உடன் காங்கிரஸ் நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று உறுதிபடக்கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications