தர லோக்கலுக்குப் போய் விட்ட தேமுதிக.. "லோக்கல் பாடி"க்குப் போட்டியிட ஆளே இல்லையாமே!
சென்னை: தேமுதிகவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட யாருக்குமே ஆர்வம் இல்லையாம். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனராம்.
ஏன் இப்படிக் கூட்டமே வரலை என்று விஜயகாந்த் குழம்பிப் போயிருக்கிறாராம். மறுபக்கம் பிரேமலதாவோ வந்தாலும் வராவிட்டாலும் கட்சி வளரும் என்று யாருக்கும் புரியாதது போல பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
விருப்ப மனு கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமாக உள்ளதாம். அவர்களில் பலர் அரை மனதுடன்தான் மனு கொடுத்துள்ளனராம். அவர்களுக்கும் மூடு மாறி விட்டால் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் அபாயமும் இருக்கிறதாம்.

ஓசியில் கூப்பிட்டும் கூட
இத்தனைக்கும் காசு கூட வாங்காமல் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனராம். நீங்க வந்தா மட்டும் போதும் என்ற ரேஞ்சுக்கு இறங்கிப் போய் வாங்கியுள்ளனராம். அப்படியும் கூட மாவட்டத்துக்கு 30 பேருக்கு மேல் கூட்டம் சேரவில்லையாம்.

ரொம்பக் கேவலமா போயிருச்சே
தேமுதிகவில் இப்படி நிலைமை கேவலமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கட்சி நிர்வாகிகள் வாய் விட்டுச் சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளதாம். முக்கிய நிர்வாகிகள் யாரும் இப்போது கட்சியில் இல்லை. எல்லோரும் திமுக, அதிமுக என்று போய் விட்டனர்.

கூட இருப்பதும் சரியில்லை
தற்போது விஜயகாந்த்துடன் இருக்கும் சிலரும் அவரது விசுவாசிகள் மட்டுமே. ஆனால் அவர்களால் கட்சிக்கு லாபம் இல்லை என்கிறார்கள். போனால் போகட்டும், இருப்பவர்கள் இருக்கட்டும் என்று விஜயகாந்த்துக்கு ஆறுதல் சொல்கிறாராம் பிரேமலதா. அதுவும் சரிதான் என்று கூறிக் கொண்டிருக்கிறாராம் விஜயகாந்த்.

ஆளே இல்லை
மொத்தக் கவுன்சிலர் பதவிகளுக்கும் போட்டியிட தேமுதிகவில் வேட்பாளர்கள் இல்லை என்பதே லேட்ஸ்ட் செய்தியாகும். யாருமே போட்டியிட முன்வர மாட்டேன் என்கிறார்களாம். செலவு செய்து சீரழிந்தது போதும் என்பதே பலர் கூறும் காரணமாக உள்ளதாம்.
நிலைமை இப்படியே போனால் எங்க போய் முடியுமோ இது என்று வடிவேலு ரேஞ்சுக்குப் புலம்பிக் கொண்டுள்ளனராம் தேமுதிகவினர்.












Click it and Unblock the Notifications