இணைப்புக்கு வாய்ப்பில்லை... அதிமுகவுக்கு இன்னமும் ஓனர் சசிகலாதான்!
இன்றைய தேதியில் அதிமுகவில் தொண்டனாக இருப்பவர் தான் உலகத்திலேயே குழப்பமானவராக இருக்க முடியும். ஜெயலலிதா அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து செக்யூரிட்டி, டிரைவர்கள் வரிசையாக கொல்லப்படுவது வரை பல கேள்விகள் அதிமுக தொண்டர்களை சழற்றி அடிக்கிறது.
அதில் மிக முக்கியமான ஒன்று சசிகலா குடும்பம் ஒதுங்கிவிட்டது என்றால் அதிமுகவின் தற்போதைய அதிகார மையம் யார்? இந்தக் கேள்விக்கு பதில் சசிகலாவேதான்... சிறைக்குள் இருந்தாலும் தினகரன் கைதுக்குப் பிறகு சசிகலா சொல்படிதான் எல்லாம் நடக்கிறது கட்சியில் என்கிறார்கள்.

தினகரன் கைதுக்கு பிறகு டாக்டர் வெங்கடேஷ், இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோர் அந்த அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் சசிகலாவுடன் நேரடித் தொடர்பில் இருந்து அவர் சொல்வதை அப்படியே கட்சிக்காரர்களுக்கு சொல்லி வழிநடத்துவது வெங்கடேஷ்தானாம்.
தினகரன் கைதான அடுத்த நாளே வெங்கடேஷ் சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்து சில உத்தரவுகளை கட்சியில் சொல்லியிருக்கிறார். வெங்கடேஷுக்கு பெங்களூரில் இருந்து போனிலும் கட்டளைகள் வருகின்றன. முக்கியமாக அமைச்சர்களிடம் இருந்து மாதா மாதம் வரும் கட்டிங்குகள் எல்லாவற்றையும் இந்த மாதம் வெங்கடேஷ்தான் வசூலித்திருக்கிறார்.
சசிகலாவின் உத்தரவுகளில் முக்கியமான ஒன்று சட்டசபையைக் கூட்டுவது. ஒரு பக்கம் அணி இணைப்பு நாடகம் போய்க் கொண்டிருக்கட்டும் இன்னொரு பக்கம் சட்டசபையைக் கூட்டுங்கள் என்பது சசியின் உத்தரவு. சட்டசபையை உடனே கூட்டாவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து என்பதால் இந்த முடிவு. ஆட்சி ஸ்திரத்தன்மையோடுதான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகும். மக்கள் மற்றும் மத்திய அரசின் கவனத்தையும் திசை திருப்பலாம். எனவே மே 5 ஆம் தேதி சட்ட்சபை கூட்டப்படலாம் என்கிறார்கள். மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இணைப்பு பேச்சு இழுபறி ஆவதற்கு காரணமும் இதுதான். ஒதுங்கிவிட்டோம் முதல் பேனர் அகற்றம் வரை நாடகங்கள் தொடர்ந்தாலும் கட்சி இன்னமும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது ஓபிஎஸ் அணியின் நம்பிக்கை. இதனாலேயே இணைப்பு முயற்சி பேச்சுவார்த்தை கட்டத்தைக் கூட எட்டாமல் அப்படியே நிற்கிறது.
அமைச்சரவையில் இடம் மட்டும்தான் தருவோம். ஜெயலலிதா மரணத்தை பற்றி பேச வேண்டாம் என்று எடப்பாடி தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் சசிகலாவின் கோரிக்கைகளாகவே பார்க்கின்றது ஓபிஎஸ் அணி.
மத்திய அரசுக்கு பயந்து கட்சியை நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் இயங்காமல் தங்களது ஆதரவு ஆளை பொதுச் செயலாளராக நியமிக்கவும் முடிவு செய்திருக்கிறது சசிகலா தரப்பு. அப்படி ஒருவர் நியமிக்கப்பட்டால் அதற்கு சசியின் சாய்ஸ் வைத்திலிங்கம்.
சசியின் பிடியில் கட்சி இருப்பதற்கு இன்னொரு ஆதாரமாக அஃபிடவிட்டைக் காட்டுகிறார்கள். கடந்த வாரம் கட்சி நிர்வாகிகள் அத்தனை பேரிடமும் ஒரு கட்டாய அஃபிடவிட்டில் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். சசிகலா குடும்பம் ஒதுங்கியதால் கேட்கிறார்கள் போல என்று நினைத்து அஃபிடவிட்டைப் பார்த்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியே மிஞ்சியிருக்கிறது. பழைய அஃபிடவிட் அப்படியே இருந்திருக்கிறது. கட்சி பொதுசெயலாளர் சசிகலாவையும் துணை பொதுசெயலாளர் தினகரனையும் முழுமனதோடு ஆதரிக்கிறேன் என்று இருந்த அபிடவிட்டில் எடப்பாடியின் பதவிகளில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்ற ஒருவரி மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் இணைக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் கட்டாய அஃபிடவிட்டில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இதனால் எடப்பாடி அணியுடன் சேரவே கூடாது என்று ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் பேசத் தொடங்கிவிட்டனர். தொண்டர்கள் எண்ணமே எங்கள் எண்ணம் என்று இணைப்பு முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டது ஓபிஎஸ் அணி.
- ஆர்ஜி












Click it and Unblock the Notifications