திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை: தமிழருவி மணியன்
சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
பாஜக அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். அதன்படி, தேமுதிகவை பாஜக அணியில் இடம்பெறச் செய்யும் நோக்கில் அக்கட்சித்தலைவர் விஜயகாந்த்தை இருமுறை நேரில் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று மறைமுக அழைப்பு விடுத்தார். விஜயகாந்த்தும் பரிசீலிப்பதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து "திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன்' எனக் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.
இதனால் திமுக, தேமுதிக கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த்தை சந்திப்பதற்கு தமிழருவி மணியன் முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
இது குறித்து தமிழருவி மணியன் தமிழ்ச் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எல்லாம் பொய்....
விஜயகாந்த்தைச் சந்திக்க முயற்சித்து, அவர் அனுமதி தரவில்லை என்பது பெரிய பொய்.

மாயத் தோற்றம்....
எஸ்றா சற்குணம் பேச்சுக்குப் பிறகு, திமுக - தேமுதிக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுவது வெறும் மாயத் தோற்றம்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு உள்ளவர்களிடம் ஆலோசித்தேன்.

நம்பிக்கை....
கூட்டத்தில் எஸ்றா வெளிப்படையாகப் பேசிவிட்டதால், விஜயகாந்த்தும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால் திமுகவோடு கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றே அவர்கள் கூறினர். திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது.

ஸ்டாலின் தலைமை....
பாஜக அணியில் எந்தச் சலசலப்பும் இல்லை. அதில் மதிமுக, பாமக இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. தேமுதிகவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். 2016-ல் ஆட்சியில் அமைக்க வேண்டும் என்று எண்ணும் விஜயகாந்த், திமுகவோடு கூட்டணி அமைப்பது சரியாக இருக்காது. இப்போது திமுகவுடன் அவர் கூட்டணி அமைத்தால், 2016-ல் ஸ்டாலின் தலைமையை ஏற்க வேண்டியிருக்கும். அதை விஜயகாந்த் ஏற்பாரா?

ஊழல் மூட்டைகள்.....
மேலும் திமுக சுமக்கும் ஊழல் மூட்டைகளை, இனி தேமுதிகவும் சுமக்க வேண்டிய நிலை வரும். அதனால் திமுகவுடன் விஜயகாந்த் நிச்சயம் கூட்டணி வைக்க மாட்டார்.

புதிய தமிழகத்தோடு கூட்டணி.....
பாமக தலித்துக்கு எதிரான இயக்கம் இல்லை என்பதைக் காட்டும் வகையில் தலித் அமைப்பு ஒன்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற வேண்டும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியோடு பேசப்பட்டு வருகிறது' என இவ்வாறு அவட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications