அங்கிருந்து 10 எம்எல்ஏக்கள் வர்றாங்க.. ஓபிஎஸ் காணாமல் போயிருவார்.. நாஞ்சில் சம்பத் ஹேப்பி!
ஓபிஎஸ் அணியில் இருந்து 10 எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு வரத் தயாராக இருப்பதால் இரண்டு அணிகளும் சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சேலம்: அதிமுகவின் பிளவு பட்டுள்ள இரண்டு அணிகளும் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக அம்மா அணியின் தலைமை கழகச் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக அம்மா அணி சார்பில் மே தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
ஓபிஎஸ்ஸை முதல்வராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. டீக்கடை வைத்திருந்த அவருக்கு கட்சியில் பல்வேறு பொறுப்புக்களை கொடுத்தார். ஆனால் இன்று அவரால் இந்த நாடு பாடாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

சேராது
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களில் 10 பேர் இந்தப் பக்கம் வரத் தயாராக உள்ளனர். விரைவில் அவர்கள் பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்க உள்ளனர். அதனால் ஓபிஎஸ் அணி விரைவில் காணாமல் போகும். அதனால் இரண்டு அணிகளும் சேரும் வாய்ப்பு 100 சதவீதம் இல்லை.

துரோகம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் முதல்வராக இருந்த ஓபிஎஸ், பதவி பறிபோனதும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பேசி வருகிறார். இது அதிமுகவிற்கு இழைக்கப்படும் துரோகம்.

இயற்கை மரணம்
ஜெயலலிதா உடல்நலம் குன்றி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் முழுவதும் குழாய்கள் பொருத்தி சிகிச்சை பெற்றார். இதய அடைப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிர் இழந்தார்.

மீண்டு வருவார்
ஜெயலலிதா உயிரைக் காக்க, தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்போது சிறையில் உள்ளார். அதிமுகவை வழி நடத்த சசிகலாவால்தான் முடியும். அவர் விரைவில் மீண்டு வருவார். கட்சியைப் பிடிப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications