மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்
திருச்சி: முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் பேசிய விஜய், மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையில் எந்த சமரசமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், நதி நீர் உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம். சமூக நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 234 தொகுதியும் நம்ம தொகுதிதான் என்று அவர் கூறினார்.
தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய் சரவெடியாக வெடித்தார்.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பிரசார பாணியிலேயே விஜய்யின் இன்றைய பேச்சு இருந்தது. விஜய் தனது பேச்சில் வழக்கம் போல திமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசினார். அதேபோல, தனது மதசார்பற்ற கொள்கையிலும், மாநில சுயாட்சியிலும் உறுதியாக நிற்பேன் என்று கூறினார். விஜய் கூறியதாவது:-
மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்
தனிப்பெரும்பான்மை பெற்று இருந்தாலும் நம்மை நம்பி முறையாக கூட்டணியில் ஆதரிக்க வர்றவங்களை ஆதரித்தே இருப்போம். தவெக ஆட்சி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமான ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஸ்டாலின் மாதிரி ஊசலாட்டம் இருக்காது. மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது. மாநில உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம்.
நதி நீர் உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம். சமூக நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 234 தொகுதியும் நம்ம தொகுதிதான். அதில் எந்த கட்சி ஜெயிச்சிருந்தாலும் அது நம்ம தொகுதிதான். பெரம்பூராக இருக்கட்டும், திருச்சி கிழக்காக இருக்கட்டும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி.. அதிலும் திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி.. அதனால் வரப்போற இடைத்தேர்தலில் உங்க வீட்டில் இருக்கும் ஒருவரை உங்களில் ஒருத்தரைத்தான் நிற்க வைக்க போறோம்" என்றார்.
மேகதாது அணை விவகாரம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் டிகே சிவக்குமார் உள்ளார். காங்கிரஸ் ஆளும் கட்சியாக கர்நாடகாவில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த சூழலில்தான், நதி நீர் பிரச்சினையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தனது பேச்சில் கூறியிருப்பது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு விஜய் கொடுத்த மெசேஜ் ஆகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, தனது கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் விதமாக மதசார்பற்ற கொள்கையிலும் ஊசலாட்டம் இன்றி உறுதியாக இருப்பேன் என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications