மக்கள் நலக்கூட்டணியில் குழப்பமோ, பிரச்சனையோ இல்லை: வைகோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் ஒரு குழப்பமும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு கிளம்பியபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் கலந்து பேசி தான் 3 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டோம். கூட்டணி கட்சிகளின் கருத்துகளை கேட்ட பிறகே தேர்தலை புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டேன்.
நான் ஏதோ தன்னிச்சையாக அறிவித்ததாக சில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை கூட்டணி கட்சியினர் மறுத்துள்ளனர். போட்டியிடவில்லை என்பதற்கும், தேர்தலை புறக்கணிக்கிறோம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்பதே எங்கள் முடிவு. நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து செயல்படுவதால் தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பின்பற்ற மாட்டோம் என அது ஏற்கனவே அறிவித்தது.
அதனாலேயே புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை.
மதிமுக புதுச்சேரி தேர்தலை புறக்கணிக்கிறது என்றார்.