தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை?
சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) தொகுதி அண்ணா தி.மு,க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இத்தொகுதியில்தான் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இடைத்தேர்தல் நடைபெற்றால் முன்கூட்டியே தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு, சுப்பிரமணியன் சுவாமி அல்லது தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் ஆகியவற்றில் ஒருதரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆனபோதும் கூட மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதில் ஜெயலலிதா மிக நிதானமாக காய்களை நகர்த்தி வருகிறார்..

மே 22-ல் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
தீர்ப்பு வெளியான சில நாட்கள் கழித்தே முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை ஜெயலலிதா சந்தித்தார். அதன் பின்னர் மே 22-ந் தேதியன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

கேள்விகள்..
இருப்பினும் ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவாரா? அல்லது 6 மாதம் முதல்வராக பதவி வகித்த பின்னர் சட்டசபையை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலுக்கு பரிந்துரைப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இடைத்தேர்தல்
மேலும் மே 23-ந் தேதியன்று அண்ணா தி.மு.க. அரசின் 4 ஆண்டுகாலம் அதிகாரப்பூர்வமாக முடிவடைகிறது. இந்த மே 23-ந் தேதிக்கு முன்பு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்தால் அந்த இடத்துக்கு இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை மாநில அரசு வலியுறுத்த முடியும்..

முன்கூட்டியே தேர்தல்?
அதே நேரத்தில் மே 23-ந் தேதிக்கு பிறகு அதாவது ஆளும் அரசின் ஆட்சிக்காலம் ஓராண்டுக்குள் இருக்கும் நிலையில் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை மாநில அரசு வலியுறுத்த முடியாது. தேர்தல் ஆணையம் நேரடியாக பொதுத்தேர்தலையே நடத்திவிடும்..

முன்கூட்டியே தேர்தல் இல்லை?
இதனால் மே 23-ந் தேதிக்கு முன்னதாக ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா தி.மு.க. மேலிடத்தின் கட்டளைப்படி சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீரென நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் தனபாலும் ஏற்றுக் கொண்டதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்திருக்கிறார்.

ஓராண்டு ஆட்சி..
இதன் மூலம் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதும் அங்கே ஜெயலலிதா போட்டியிடுவதும் உறுதியாகி இருக்கிறது. அப்படி ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எஞ்சிய ஓராண்டு காலமும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் நீடிக்கும்; சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை நலத்திட்டங்களையும் முழு வீச்சில் செயல்படுத்திவிட்டு அடுத்த ஆண்டே சட்டசபை பொதுத்தேர்தலை ஜெயலலிதா எதிர்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஆக தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications