டிச. 30வரை வங்கிகளுக்கு லீவே கிடையாது என்று கிளம்பிய வதந்தியால் பரபரப்பு.. ஆர்.பி.ஐ மறுப்பு
டிச. 30ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றிக் கொள்ள மக்கள் சிரமப்பட்டு வருவதால் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என்று ரிசர்வ் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளதாக வெளியான செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு கடந்த 8ம் தேதி வெளியானதில் இருந்து மக்கள் பணத்தை மாற்றுவதற்கும், எடுப்பதற்கும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 10ம் தேதியில் இருந்து வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து மக்கள் கூட்டம் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் அலை மோதி வருகிறது.

மேலும் ஏடிஎம்களில் நேற்றில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ஏடிஎம் மையங்கள் முழுமையாக திறக்கப்படாமல் உள்ளன.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, போதிய அளவிற்கு 100 நோட்டுகள் இல்லை. 2வது, 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு வந்து சேரவில்லை. 3வது புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தக் கூடிய அளவில் வசதி இல்லை. இப்படி பல காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதி வருவதால், சனி, ஞாயிறு கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது. எனினும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு டிசம்பர் 30ம் தேதி வரை விடுமுறை இல்லை என்று ரிசர்வ் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த அறிவிப்பை, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா உறுதிபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications