கோயம்பேட்டில் பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் 2–வது நாளாக நிறுத்தம்- பலத்த பாதுகாப்பு!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பேருந்துகள் தொடர்ந்து 2-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கடந்த 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் நேற்று முன்தினம் மாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டு இருந்த கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் பெங்களூருக்கு செல்லும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 2வது நாளாக நேற்றும் கர்நாடகாவுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பெங்களூருக்கு செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக அரசு பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications