கட்டிக் கட்டியாக தங்கம் பதுக்கிய சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. ராம்மோகன் ராவ்
கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கத்தை பதுக்கிய சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.
சென்னை: சேகர் ரெட்டி வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை செய்த போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ராம்மோகன் ராவ் வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள் என்று கூறப்பட்ட நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அதனை மறுத்துள்ளார்.
சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையிலேயே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் ஒரே நாளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், ராம்மோகன் ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் அரசியல் சாசனத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, சேகர் ரெட்டிக்கு பல்வேறு விதமான வகையில் அரசு ஒப்பந்தங்களை கோடிக்கணக்கில் கிடைக்க ராம்மோகன் ராவ் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ராம்மோகன் ராவின் மகன் விவேக் நடத்தும் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையில் சேகர் ரெட்டியின் நெருக்கத்தை பயன்படுத்தி முதலீடுகள் பெறப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ராம்மோகன் ராவ் இதனை மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications