தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கட்டுமான பணிகளுக்கு தடை: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில், எந்த வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்க தலைவர் கே.சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை மாசுபடுவதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதை நம்பியுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காகவும் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தை தொடங்கினோம். கீழ்பவானி கால்வாய், நிலவியல் ஓடை ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பெரும்பள்ள ஓடைக்கு வருகிறது.

No more approval for buildings on waterbodies: HC

ஓடை போன்ற நீர்நிலைகள், விவசாய நிலங்களின் பாசனத்துக்கு நீர் ஆதாரமாக இருப்பதுடன், திடீரென கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படும்போது மழைநீரைத் தேக்கி வைக்கவும் பயன்படுகின்றன. பாசனத்துக்கு பெரிதும் பயன்படும் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு ஏற்படுத்தியதால் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. தண்ணீரும் தேங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தண்ணீர் செல்ல தடை

ஓடையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கனமழை பெய்யும்போது கதிரம்பட்டி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2009ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஈரோடு வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஓடை ஆக்கிரமிப்பு

தாசில்தார் மட்டுமல்லாமல், நசியனூர் வருவாய் ஆய்வாளர், கதிரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் ஓடையில் கழிவு மண்ணை கொட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் கடமையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெரும்பள்ள ஓடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பள்ள ஓடையில் ஆய்வு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து மனுதாரர் வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் வாதிடும்போது, பெரும்பள்ள ஓடை மீது சாலை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்

சமீபத்தில் பெய்த கன மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை திறந்து விட்டதால், சென்னை வெள்ளக்காடானது; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.வெள்ளப் பாதிப்புக்கு, ஆறுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததும், துார் வாராததும் தான் முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. ஏரி, குளங்களை, முறையாக துார் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தால், தண்ணீர் போக்கு தடைபட்டிருக்காது; வீடுகளுக்குள் புகுந்திருக்காது. அதனால், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நீர் நிலைகளில் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது' என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+