முதியோர் உதவித்தொகைக்கு ஆதார் அட்டை அவசியமில்லை – அதிகாரிகள் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை (ஓஏபி) பெறுவதற்கு இனிமேல் ஆதார் கார்டு இருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியதால் முதியோர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் ஓஏபி பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவற்ற முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கு வயது, இருப்பிட சான்றுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை.
இந்தநிலையில், ஆதார் அடையாள எண்ணை வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தால் மட்டுமே இனி மாதந்தோறும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து வட்டாச்சியர் ஒருவர், "ஆதார் கார்டு வைத்திருக்கும் முதியோர்கள் ஆதார் எண்ணை வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவி தொகை கிடைக்கும் என்று எந்த உத்தரவும் போடவில்லை. ஆதார் கார்டு இல்லாவிட்டாலும் உதவி தொகை வழக்கம் போல் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications