நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு குஷ்பு செய்த குற்றமென்ன..? கேட்கிறார் திருநாவுக்கரசர்!
நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு குஷ்பு பெரிய குற்றம் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மூன்று தலாக் முறைக்கு எதிராகவும், பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் பேசி சர்ச்சை கிளப்பியிருந்தார் குஷ்பு. காங்கிரஸ் கொள்கைகளுக்கு நேர் எதிராக அவரது கருத்து இருந்தது. பாஜகவுக்கு ஆதரவு கருத்தாக இது பார்க்கப்பட்டது.

குஷ்பு மீது காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி நேரடியாகவே குற்றம்சாட்டினார். குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய திருநாவுக்கரசர், குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். பேசுவதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று வினவிய அவர் நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு மாபெரும் குற்றம் எதுவும் குஷ்பு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
குஷ்பு கட்சியில் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கக் கூடியவர். கட்சியின் வளர்ச்சிக்காக, நன்மைக்காக தொடர்ந்து பாடுபடுவார் என பாராட்டினார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications