வெள்ள பாதிப்பு எதிரொலி: சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!
சென்னை: மழை, வெள்ளத்தால் மக்கள் துயருற்ற நிலையில், சென்னையில் உள்ள தங்கள் ஹோட்டல்களில் புத்தாண்டையொட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்களை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பருவமழையின்போது ஏற்பட்ட திடீர் பெரு மழை மற்றும் ஏரி நீர் திறந்துவிடப்பட்டதில் நிலவிய குழறுபடி போன்றவற்றால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை மாநகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பில் இருந்து பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. எனவே இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்திலுள்ள நிலையில், இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடத்தப்போவதில்லை என நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சென்னை மாநகர போலீசாரும் உறுதி செய்துள்ளனர். நடன விருந்து போன்ற கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு நட்சத்திர ஹோட்டல்கள் சார்பில் எந்த மனுவும் அளிக்கபப்டவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை தொழிலதிபர்கள் பலர் பெங்களூர் அல்லது கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். பெங்களூரில் இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications