கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை திறக்க வேண்டுமானால் இதை செய்யுங்கள்.. ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கடி
உலக அளவிலான அணுசக்தி ஆதரவு குழுவில் இந்தியாவை உறுப்பினராக ரஷ்யா ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை நிறுவ அனுமதிக்க முடியாது என்பதே இந்தியா நிலைப்பாடாக உள்ளது.
டெல்லி: உலக அளவிலான அணு விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராக ரஷ்யா ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6வது உலைகள் நிறுவ முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அணு விநியோகக் குழுவில் உறுப்பினர் அந்தஸ்து கிடைக்காவிட்டால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான அணுசக்தி திட்டங்களை, தொடராமல் அவற்றை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
சென்ற வாரம், ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகோஜின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சர்வதேச அணு விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராக, ரஷ்யா நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என, மோடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு, டிமித்ரி ரோகோஜின், நேரடியாகப் பதில் அளிக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக, இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டுவரும் அணுசக்தி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவது தொடர்பாகப் பேசிவிட்டு சென்றார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகோஜின் நடவடிக்கையால், இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அணு விநியோகக் குழுவில் உறுப்பினராக, பல ஆண்டுகளாக முயற்சித்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உலக அளவில் அணு ஆயுத வல்லரசாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது.
ஆனால், ரஷ்யா இதற்கு முழு அளவில் ஆதரவு தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ரஷ்யா இந்தியாவில் மேற்கொண்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின், 5, 6வது உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமானால், ரஷ்யா அணு விநியோகக் குழுவில் உறுப்பினராக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று, மத்திய அரசு விரும்புகிறது.இதன்காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 5,6வது உலைகள் நிறுவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.