கருணாநிதி இரங்கல் கூட்டத்திற்கு அமித் ஷா வருவாரா, மாட்டாரா.. தமிழிசை சொல்வது என்ன?
நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதாக தகவல் வரவில்லை என தமிழிசை கூறுகிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் 30-ம் தேதி சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க போவதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. இதை தவிர, தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மாற்ற நிகழ்வு
ஆனாலும் எத்தனை தலைவர்கள் இந்த நினைவேந்தல் கூட்டத்துக்கு வருகை தந்தாலும் அமித்ஷாவின் வருகை மட்டும் சிறப்பாக பார்க்கப்படுகிறது... கோ பேக் அமித்ஷா என்ற முழக்கமே பிரதானமாக ஒலித்து நின்ற நிலையில், தற்போது அமித்ஷா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக கவனிக்கப்படுகிறது! இது ஒரு அரசியல் முக்கியத்துவம் ஒன்றாக கணிக்கப்படுகிறது! ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது!
உலவும் கருத்து கணிப்புகள்
திமுக கூட்டத்தில் பாஜக பங்கேற்பது என்பது குறித்த விவாதங்களையும், அதன் உட்பொருட்களையும் அரசியல் வல்லுனர்கள் இப்போதே ஆராய தொடங்கிவிட்டனர். மேலும் சிலர் அரசியல் மற்றும் கூட்டணி கணிப்புகளையும் உலவிவிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இவ்வளவு பரபரப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தகவல் வரவில்லை
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பது குறித்து தங்களுக்கு தகவல் எதுவும் வரவில்லை என்று கூறுகிறார். அப்படி அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றால் தமிழக தலைமையிடத்துக்கு அதிகாரப்பூர்வமாக மத்திய தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் கூறுவார்கள். பாஜக தலைமையிடமிருந்து தங்களுக்கு தகவல் வந்தவுடன் அதனை தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார். வதந்திகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும், அதுபோன்ற வதந்திகளுக்கோ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ட்விட்டர் பதிவுகளுக்கோ தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
வருவாரா? மாட்டாரா?
பாஜக தலைமைக்கு அமித்ஷாவின் சென்னை வருகை தெரிவிக்கப்பட்டுவிட்டதா? அந்த தகவல் தமிழக பாஜக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதா? அமித்ஷா வருவாரா? மாட்டாரா? இன்னும் எதுவும் பிடிபடாமலேயே உள்ளது. 30-ம் தேதிக்கு இன்னும் 3 நாள்தான் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.