சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கிறது. இதனை சரி செய்ய புதிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் ஆனந்த் பதிலளிக்காமல், நழுவி சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.
இதற்கு முன்னரும், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றிருந்தார். இப்படி மீடியாக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்காமல் நழுவது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

என்ன நடந்தது?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, சென்னையில் மூதாடி பாலியல் வன்கொடுமை, தலைமை காவலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, இளம்பெண் கார் ஏற்றி கொலை என குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் மழுப்பல்
இப்படி இருக்கையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது? என செய்தியாளர்கள் அமைச்சர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல், பக்கத்தில் இருந்த பெண்ணிடம், "யாருமா அது துளசியா .. நல்லா இருக்கியாமா .. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. தோ வரேன்" என்று பேசி நழுவியிருக்கிறார்.
அதேபோல ரேஷன் கடை, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்த கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவரும் உரிய பதிலளிக்காமல் நழுவியுள்ளார்.
கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ்
ஆய்வு பின்னர் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன? கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், முதலமைச்சர் இது குறித்து விளக்கமளிப்பார் என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் எனில், துறைக்கு அமைச்சர்கள் எதற்கு என்று செய்தியாளர்கள் கேட்க.. அமைச்சர் மழுப்பலாக பதிலளித்து நகர்ந்துவிட்டார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அதேபோல நேற்று அமைச்சர் செங்கோடையனிடம், வள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் செங்கோட்டையன் பதிலளிக்காமல் நழுவி விட்டார். இப்படி செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் நழுவுவது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications