ஒருத்தரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரல…. வெறிச்சோடி கிடந்த சென்னை மண்டல அலுவலகங்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுக்களை வேட்பாளர்கள் நேற்றிலிருந்து தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த மண்டலத்திலும் ஒரு வேட்பாளர் கூட வந்து மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் உள்ள மாநகராட்சி மண்டலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு செப். 25 மாலையில் அறிவிக்கப்பட்டது. மறுநாளான நேற்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் தேதி அறிவிப்பால் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தயார் நிலையில் இல்லை.
திமுக, காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்புக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாளான நேற்று ஒருவரும் வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற காலை 10 மணி முதல் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், நேற்று மாலை வரை ஒருவர் கூட வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரவில்லை. இதனால், தேர்தல் அலுவலர்கள் காலை முதல் மாலை வரை அமர்ந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொதுவாக அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்தப் பின்னர்தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் முதல் நாளில் இருந்தே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி விடுவார்கள்.
இந்த முறை, மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களை முதல் நாளிலேயே தாக்கல் செய்ய தயார் நிலையில் இல்லை. எனவே, சென்னை மாநகராட்சி உட்பட்ட தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.