”கட்” அடித்த இளங்கோவன், விஜயதாரணி... கடுப்பில் தூத்துக்குடி மாநாட்டை கேன்சல் செய்த நக்மா!
சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உரிய மரியாதை தராததால் தூத்துக்குடியில் இன்று நடைபெறும் மண்டல மாநாட்டை கேன்சல் செய்வதாக தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை நக்மா தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருவதாக இருந்தது. அவருக்கு மகளிர் காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த நக்மாவை வரவேற்க காங்கிரஸார் இரு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றனர். அங்கேயே மகளிர் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்து, நக்மா அதிருப்தியடைந்தார். இந்நிலையில் நேற்று காலையில் நக்மா சத்திய மூர்த்தி பவன் கிளம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் இளங்கோவனும், விஜயதாரணியும் வர மறுத்துவிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் துாத்துக்குடியில் இன்று நடக்கும் மண்டல மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க செல்வதாக காரணம் கூறி நக்மா நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர். இதனால் கோபமடைந்த நக்மா வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
இதுகுறித்து கட்சி வட்டாரத்தில், நக்மா சென்னை வந்த தகவல் தெரிந்தும் அவரை சந்திக்க விஜயதாரணி செல்லவில்லை. ஆனால் நக்மாவை, நேராக துாத்துக்குடி வருமாறு அழைத்துள்ளார். மேலும் சென்னையில் நக்மா தங்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் அவர் அடையாறில் உள்ள தன் தங்கை ஜோதிகா வீட்டில் தங்கியுள்ளார். எனினும் இன்று மண்டல மாநாட்டில் பங்கேற்க நக்மா துாத்துக்குடி செல்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஷ்புவுக்கு முன் 2009 இல் நக்மா காங்கிரசில் சேர்ந்துள்ளார். தி.மு.கவில் இருந்த குஷ்பு, சமீபத்தில் தான் காங்கிரசுக்கு வந்தார். இதனால், இருவருக்கும் இடையே சீனியர், ஜூனியர் பிரச்னை தலைதுாக்கி உள்ளது. சீனியர் என்றபோதிலும் நக்மாவுக்கு இப்போது தான் கட்சி பொறுப்பு கிடைத்துள்ளது. ஆனால், குஷ்பு கட்சியில் சேர்ந்ததும் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதனால், தனக்கென தனி கோஷ்டியை குஷ்பு உருவாக்கி வருகிறார்.
Sorry have to cancel my tuttukudi trip. As I am still to meet with my state Mahila president
— Nagma Morarji (@nagma_morarji) October 16, 2015
எனவே, தமிழகத்தில் குஷ்புக்கு போட்டியாக நக்மாவை களமிறக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான குஷ்பு காய் நகர்த்தியதன் விளைவு தான் நேற்றைய நிகழ்ச்சி ரத்து என கூறப்படுகிறது. எனினும் 22-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில், நக்மாவையும், குஷ்புவையும் பங்கேற்க வைக்கும் முயற்சி நடக்கிறது என்றும் கட்சி வட்டாரத்தில் செய்திகள் உலவி வருகின்றன.
இதனிடையே நக்மா தமது ட்விட்டர் பக்கத்தில் தூத்துக்குடி மண்டல மாநாட்டுக்கு தாம் செல்லப்போவதில்லை என பதிவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.