ஏம்ப்பா இந்த வெயிலை எங்கேயாச்சும் பாத்தீங்களா... "இன்ப அதிர்ச்சி"யில் சென்னை மக்கள்!
சென்னை: சென்னை மக்களுக்கு இன்று காலையிலேயே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக காலையிலேயே வெறுப்படிக்கும் வெயில் இன்று இல்லை. மாறாக மேக மூட்டமாக இருந்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வறுத்தெடுத்து வந்தது. தினசரி 104, 105 என்று வெயில் வெளுத்ததால் மக்கள் கதிலங்கிப் போயிருந்தனர். டிரஸ் போடுவதே சுமையாகிப் போனது மக்களுக்கு - அப்படி ஒரு புழுக்கம். இடை இடையே சின்னச் சின்ன மழை என சென்னை மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் படிப்படியாக வெயில் குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர். இன்று காலை வெயில் சுத்தமாக இல்லை. வழக்கமாக 6 மணிக்கெல்லாம் அனல் பறக்க ஆரம்பித்து விடும் வெயில். இன்று காலையில் மேக மூட்டமாகவே இருந்தது.
இந்த செய்தியை அடிக்கும் இப்போது வரை சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வரவில்லை. வெப்பம் இல்லை, அனல் இல்லை, புழுக்கம் இல்லை. இதமான காற்று வேறு வீசி வருகிறது. ஆனால் மழையைத்தான் காணோம்.
மழை வரலாம் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர். வெயில் இல்லாத வரை நல்லதே என்றும் மக்கள் பெருமூச்சு விடுகின்றனர்.