சீட் கேட்காமல் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி: ஜெ.
சென்னை: லோக்சபா தேர்தலில், போட்டியிட, 'சீட்' கேட்காமல், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளுக்கு, நன்றி தெரிவித்து, கடிதம் எழுதி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
அ.தி.மு.க., கூட்டணியில், சரத்குமார் தலைமையிலான, சமத்துவ மக்கள் கட்சி; செ.கு.,தமிழரசன் தலைமையிலான, இந்திய குடியரசு கட்சி; தணியரசு தலைமையிலான, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை; ஜெய்னுலாபுதீன் தலைமையிலான, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்; அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், தமிழ் மாநில முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகள் உள்ளன.
ஆனாலும் இந்த கட்சிகள் யாருக்கும் ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார் ஜெயல்லிதா.
கம்யூனிஸ்ட்கள் விலகல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தாங்கள் கேட்ட சீட் ஒதுக்கப்படாததை கண்டித்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறின. தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து விட்டன.
சரத்குமாரின் ஆதரவு
அதேபோல நெல்லையில் மாநாடு நடத்தி பவர் காட்டிய சமக தலைவர் சரத்குமார், லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டார். ஆனால், வழங்கப்படவில்லை. எனிவும், அவர் ஆதரவை தொடர, முடிவு செய்துள்ளார்.
அதிமுகவிற்கு ஆதரவு
அதேபோல லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் பல்வேறு கட்சிகள் ஆதரவை தொடர்கின்றன. அதேபோல பல்வேறு அமைப்புகள், அ.தி.மு.க.,விற்கு, ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு ஈடுபாடு காட்டுங்க
'அ.தி.மு.க., வேட்பாளர்கள், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுங்கள்' என, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
நேரில் சந்தித்து ஆதரவு
இதனிடையே அதிமுகவிற்கு ஆதரவு தரும் கட்சி தலைவர்கள், போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதாவை, சந்தித்து, தங்கள் ஆதரவை மீண்டும் தெரிவித்தனர். அவர்களுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்தார்.
வெயிட் கவனிப்பு
சீட் ஒதுக்கா விட்டாலும் அதிமுகவிற்கு ஆதரவாக தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூட்டணி கட்சிகளுக்கு, ஆதரவு அமைப்புகளுக்கும் வெயிட்டாக கவனிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.