சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.. அழகிரி "அதிரடி" முடிவு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, கடந்த லோக்சபா தேர்தலின் போது திமுக - தேமுதிக கூட்டணியைக் குலைப்பது போல், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.
இதனால், முதலில் தற்காலிகமாகவும், பின்னர் நிரந்தரமாகவும் கட்சியில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, திமுக தலைமையை தொடர்ந்து விமர்சித்து வந்தார் அழகிரி.

மேலும், கருணாநிதியைச் சந்திப்பதை தவிர்த்து வந்த அழகிரி, சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தனது தாய் தயாளு அம்மாளை மட்டும் அவ்வப்போது சந்தித்து வந்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சமீபத்தில் கருணாநிதியைச் சந்தித்தார் அழகிரி. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த சந்திப்பு பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பின்னர் மீண்டும் தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக கருணாநிதியைச் சந்தித்தார் அழகிரி. ஆனால், இந்த சந்திப்பின் போது கருணாநிதியிடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து பெற்றதாக அழகிரி தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட அடுத்தநாளே நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் மீண்டும் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி திமுகவின் வெற்றிக்காக அவர் மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி, ‘சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவில்லை என்றும், இது தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்' என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது தந்தையான திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபின், தனது பேஸ்புக் பக்கத்தில், "சூரியனுக்கு சொந்தங்கள் நாங்கள், ஆதரிப்பீர் உதயசூரியன்" என அழகிரி பதிவிட்டிருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று யாருக்கும் ஆதரவில்லை என மறைமுகமாக தனது ஆதரவாளர்களுக்கும் அவர் தெரிவித்திருப்பது திமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications