நீங்களே சொல்கிறீர்கள்.. நீங்களே கற்பனை செய்கிறீர்கள்...தமாகாவுடனான பேச்சு குறித்து ஸ்டாலின் விளக்கம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அப்படி யார் சொன்னது என்று திருப்பிக் கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திமுக கூட்டணியில் ஆரம்பத்தில் தேமுதிக வரப் போவதாக பயங்கர பரபரப்பைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் அது நடக்காமல் போய் விட்டது. இந்த நிலையில் தற்போது தமாகா வரப் போவதாக ஒரு புதுத் தகவல் உலா வந்து கொண்டுள்ளது.

இதனால் காங்கிரஸ் தரப்பு பதட்டத்தில் உள்ளது. தமாகா வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதேசமயம், காங்கிரஸுடன், தமாகாவையும் சேர்த்து கூட்டணியில் இணைக்க திமுக மும்முரமாக இரு்பபதாக தகவல்கள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டில் சந்தித்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
மு.க.ஸ்டாலினுடன், கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியும் ஆலோசனையில் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் கருணாநிதியைச் சந்தித்து ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கேட்டறிந்தனர்.
கருணாநிதியுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். அப்போது அவரிடம், தமாகவுடன் பேச்சு நடக்கிறதா என்று கேட்டபோது, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக யார் சொன்னது? நான் சொன்னேனா? நான் ஒன்றும் சொல்லவில்லையே. நீங்களாகவே சொல்கிறீர்கள். நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். நீங்களே எழுதுகிறீர்கள். நீங்கள் செய்யும் கற்பனைக்கு நான் உடந்தையாக இருக்க முடியாது என்றார் ஸ்டாலின்.
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை எப்போது முடியும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முடிந்தவுடன் நான் உங்களிடம் சொல்கிறேன் என்று பதிலளித்தார் ஸ்டாலின்.
சிறுதாவூர் பங்களா விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஆய்வு மேற்கொள்வது குறித்த கேள்விக்கு, மகிழ்ச்சி என்று சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications