இந்த முறை டிராபிக் ராமசாமியை அதிமுகவினர் மிரட்டவில்லை.. ஏன் தெரியுமா?
சென்னை: வழக்கமாக தமிழக அரசுக்கு எதிராக நான் வழக்குப் போட்டால் அதிமுக தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் வரும். இந்த முறை முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து நான் போட்டுள்ள வழக்கில் எனக்கு இதுவரை மிரட்டல் வரவில்லை. காரணம், அதிமுகவினரும் கூட தங்களது அம்மாவின் உடம்புக்கு என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளதால்தான் என்று கூறியுள்ளார் சமூக சேவகர் டிராபிக் ராமாசமி.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தெளிவான தகவலை இதுவரை யாரும் கூறவில்லை. அவர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக இருந்து வருகிறார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு என்றார்கள். பின்னர் நோய்த் தொற்று என்றார்கள். சரியான காரணம் தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுகவினரும், தமிழக மக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
காவிரியில் தமிழகம் அடுத்தடுத்து சரமாரியாக கர்நாடகத்தாலும், மத்திய அரசாலும் முதுகில் குத்தப்பட்ட நிலையில் வலிமை வாய்ந்த தலைவரான ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வேதனை அடைய வைத்துள்ளது. அதை விட முதல்வரின் உடல் நலம் குறித்து மூடு மந்திரமாக சம்பந்தப்பட்டவர்கள் பேசி வருவதும் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
ஜெ. உடல் நலம்
இந்த நிலையில்தான் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். அதில், முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சாலை முழுவதும் போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற நோயாளிகள் சென்றுவருவதற்கும் இடையூறாக இருக்கிறது.
அரசுக்கு உத்தரவு
மேலும், அரசுத் தரப்பு முதல்வர் உடல் நலம் குறித்த தகவலை வெளியிட வேண்டும் எனக் கூறியிருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் நாளைக்குள் (இன்றைக்குள்) அதற்கான விளக்கத்தை அரசுத் தரப்பிலிருந்து பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இன்று அறிக்கை தாக்கல்
இதையடுத்து இன்று அரசுத் தரப்பில் முதல்வரின் உடல் நலம் குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து வழக்குத் தொடுத்தவரான டிராபிக் ராமசாமி கூறுகையில்,வழக்கமாக இப்படி வழக்குப் போட்டால் அதிமுக தரப்பு மிரட்டும். ஆனால் இந்த முறை அது போல வரவில்லை.
அதிமுகவினரே ஆர்வமாக உள்ளனர்
காரணம், அதிமுகவினருக்கே கூட அவர்களது அம்மாவின் உடல் நலம் குறித்து தெரியவில்லை. அவர்களும் ஆவலாக உள்ளனர். எனவே மக்களுக்கும், அதிமுகவினருக்கும் அரசு மூலம் நல்ல தகவல் வரும் என நம்புகிறேன் என்றார் ராமசாமி.
ஆனால் தமிழக அரசு பளிச்சென இதுதான் பிரச்சினை என்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைக்குமா?