ஜெயலலிதாவுக்கு நோபல், மகசேசே விருது… அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்
மறைந்த ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசு மற்றும் மகசேசே விருதுகளை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் மகசேசே விருதுகளை அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடன் ஜெயலலிதா மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய நாற்காலியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கண்ணீர் மல்க முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர். பெண்கள் கதறி அழுதவாறு இருந்தனர்.
பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான தீர்மானம் ஜெயலலிதாவிற்கு பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.