திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது- பொன். ராதாவிற்கு ஸ்டாலின் சூடு
திராவிட இயக்கத்தை அழிக்க அல்ல... எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் புது கல்லூரி மாணவர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
மாணவர்கள் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழர்களின் வீர வளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசையும் கேட்டுக் கொள்ளக்கூடிய வகையில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என மத்திய அமைச்சர்கள் கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மிகப்பெரிய போராட்டம்
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் 1965ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டம் தமிழகத்தில் நடந்தது என்றார்.
மாணவர்கள் போராட்டம்
1965ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் தற்போது மாணவர்கள் போராடி வருகின்றனர் என்று கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அலட்சியப்படுத்த வேண்டாம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். மாணவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் அரசுகளுக்கு வீழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார்.
யாராலும் தொடக்கூட முடியாது
திராவிட இயக்கத்தை போகியில் எரித்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தை அழிக்க அல்ல எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றார்.