தேர்தல் அறிவிப்பு எதிரொலி.. உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல்
சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துவிட்டன. இனிமேல், மாநிலத்தில் அரசு என்று ஒன்று இருந்தாலும் கூட அனைத்து நிர்வாகத்தையும் ஏறத்தாழ தேர்தல் ஆணையமே நிர்வகிக்கும்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எந்த விதிமீறல்களிலும் ஈடுபட கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது.
எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிப்பு செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படையை உருவாக்கி இருக்கிறோம். வாக்காளர்களுக்கு இலவசம் கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உறுதிபடுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறும்.
இன்றே வாகன சோதனை தொடங்க உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை யாராவது எடுத்துச் சென்றால், அவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது, அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போதும், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பல வியாபாரிகள் அதிலும் குறிப்பாக, தங்கம், வெள்ளி வியாபாரிகள், மொத்த கொள்முதல் வியாபாரிகளுக்கு பண இழப்பும், நேரம், காலம் விரையமும் ஏற்பட்டது.
தனியார் கார்கள் மட்டுமின்றி, ஆங்காங்கு ஆம்னி, அரசு பஸ்களையும் நிறுத்தி சோதனை நடத்தினர் தேர்தல் அதிகாரிகள். இதனால் பொதுமக்களும் அவதிப்பட்டனர். எனவே வியாபாரிகள் முறையான ஆவணத்தோடு பணம் எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications