உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ரிசைன் பண்ணிடுங்க... சச்சின், ரேகாவை விளாசும் சமாஜ்வாதி எம்.பி.
டெல்லி: ராஜ்யசபைக்கான நியமன எம்.பி.க்களான சச்சினும், ரேகாவும் மாநிலங்களவைக்கு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சமாஜ்வாதி எம்.பி. அவர்களுக்கு வர விருப்பம் இல்லை எனில் ராஜினாமா செய்திருக்கலாமே என்று தெரிவித்தார்.
ராஜ்யசபாவுக்கு தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுள் 233 உறுப்பினர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 12 உறுப்பினர்கள் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவைகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.

அதன்படி சச்சினும், ரேகாவும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஒருநாள் கூட அவைக்கு வரவில்லை. எம்.பி.க்களாக இருந்தும் அவை நடவடிக்கையில் கலந்துகொண்டு, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், இந்த கூட்டத் தொட்ரின் இரண்டாவது அமர்வில் சச்சினையும், ரேகாவையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் அவைக்கு வராததால் மக்கள் பணியாற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
துணை சபாநாயகர் குரியன் பேசுகையில், இது அவை உரிமை மீறலின் கீழ் வராது என்றும், நியமன உறுப்பினர்கள் அவையில் சில நாட்கள் இருக்கும் வகையில் அவர்களை அகர்வால் சம்மதிக்க வைக்கலாம் என்றும் கூறினார். அவைத் தலைவர் அறிவுறுத்தினால், அந்த உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதுவதாக அகர்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications