ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 131 பேர் வேட்புமனு தாக்கல்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 126 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இன்று மனுக்கள் மீதான பரிசிலனை நடைபெறும்.
சென்னை: பலமுனைப்போட்டியால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பலமுனைப் போட்டியால் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை டிசம்பர் 4ஆம் தேதி கடைசி தேதியாகும் கடைசிநாளன்று நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் குவிந்தனர்.
ஆர்.கே.நகரில் குவிந்த மனுக்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு நாகராஜன், சுயேட்சையாக டிடிவி.தினகரன், நடிகர் விஷால்,தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 145 வேட்புமனுக்களை 131 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
குவிந்த வேட்பு மனுக்கள்
131 வேட்பாளர்களில் 126 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இன்று ஒரே நாளில் 107 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று பரிசீலனை
நவம்பர் 27 ம் தேதி தொடங்கிய ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை மாலை நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்டுள்ள 145 வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படும். யார் யாரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும், யாருடைய மனுக்கள் தள்ளுபடியாகும் என்பது இன்று தெரியவரும்.
களைகட்டும் தேர்தல் களம்
வேட்புமனுக்களை வாபஸ் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின்னரே சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். தினகரன் தொப்பியையும், விஷால் விசிலையும், தீபா படகையும் எதிர்பார்க்கின்றனர். சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் பிரச்சாரத்தில் அனல் பறக்கும்.