வடகிழக்குப் பருவமழை தீவிரம்: இன்னும் 24 மணிநேரத்திற்கு மழை கொட்டுமாம் சொல்கிறார் ரமணன்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரையில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

முல்லைப்பெரியாறு அணை
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையினால் சோத்துப்பாறை அணை நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உயர்ந்துள்ளது.

ஆறுகளில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 ஆகிய அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு மற்றும் பரளியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியல் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேங்கிய வெள்ளம்
தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இடியுடன் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை முதல் வெயிலடித்த நிலையில் பிற்பகலில் மீண்டும் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன.

வேலூரில் மழை
அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. வேலூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும்
இதனிடையே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியானது கர்நாடக கடற்கரையை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் நீடிப்பதாக ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார். இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாடி, மேலூர், நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சாப்லா என்று பெயரிடப்பட்ட புயலானது இன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஏமன் நாட்டிலுள்ள ரியா நகருக்கு தென்கிழக்கே கரையை கடந்ததாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications