வடக்கு பார்த்து 'வாஸ்து' மேடை… பிரதமராக ஜெயலலிதாவின் பிரச்சார டெக்னிக்
சென்னை: டெல்லி செங்கோட்டைக்கு செல்ல ‘ரெட்போர்ட் எக்ஸ்பிரஸ்'சில் பயணத்தை தொடங்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனையில் இருந்து வேட்பாளர்களை அறிவித்தது வரை ஜோதிடர்கள் கூறியதையே பின்பற்றி வருகிறார்.
இந்திய நாட்டின் பிரதமராகவேண்டும் என்று லோக்சபா தேர்தலி பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஜெயலலிதா, டெல்லி வடக்கே இருப்பதால் வடக்குப் பக்கமாக பிரசாரம் கிளம்புவது, வடக்கே பார்த்த கோயிலில் வழிபடுவது என வேட்பாளர்களுக்கு கட்டளை போட்டிருக்கிறார். வடக்கு வாஸ்துவை சரியாக பின்பற்றி வருகிறார்.
காஞ்சிபுரம் மேடை
கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா. காஞ்சிபுரத்தில் பிரச்சார மேடை அமைக்க முதலில் காந்தி ரோடில் உள்ள தேரடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரச்சார மேடை வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை அடுத்து பிரச்சார மேடை, காமராஜர் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
வடக்கே பார்க்கணும்
டெல்லி வடக்கு பார்த்து இருப்பதால், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மீனம்பாக்கம், நாகப்பட்டினம், நாகர்கோவில் என ஜெயலலிதா பிரச்சாரம் செய்த அனைத்து ஊர்களிலும் வடக்கு பார்த்தே மேடை அமைக்கப்பட்டது.
நாகையில் டென்சன்
நாகையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித் திடலில்தான் வாஸ்து படி பிரச்சார மேடை அமைக்கப்பட்டது. அமைச்சர் காமராஜ், குடிசை மாற்று வாரியத் தலைவர் தங்கமுத்து உள்ளிட்டவர்கள் முதல்வரின் பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
கூட்டம் கூடவில்லை
ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கையசைத்தபடி வந்தபோது, எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அதில் ஜெயலலிதா அப்செட் ஆகிவிட்டாராம். கூட்டம் குறைவாக இருந்தாலும், அது அப்பட்டமாக தெரியாது என்பதாலேயே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
நெருங்க விடாத ஜெ
ஜெயலலிதா பேசி முடித்ததும், 'மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அம்மா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்வு இப்போது நடைபெறும்' என்று மைக்கில் சொல்லிவிட்டு, ஜெயலலிதாவின் காலைத்தொட்டு வணங்குவதற்காக அருகே சென்றார் அமைச்சர் காமராஜ். ஆனால் அவரை நெருங்கவே விடவில்லையாம் ஜெயலலிதா. இதனால் பதற்றத்தில் இருக்கிறாராம் காமராஜ்.
காரைக்குடியில் மேடை
சிவகங்கை தொகுதி வேட்பாளரை ஆதரித்து,முதல்வர் ஜெயலலிதா, வரும் 21ம் தேதி காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அங்குள்ள காந்தி மகர்நோன்பு பொட்டல் முதலில் தேர்வு செய்யப்பட்டது.
வேறு இடத்திற்கு மாற்றம்
ஆனால் பொதுக்கூட்ட மேடை வடக்கு நோக்கி அமைய வேண்டும், என்பதால் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் வந்திறங்கும், ஹெலிபேட் தளத்தை, சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான உதயகுமார் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஹெலிபேட் தளத்தை சுற்றிலும் பேவர் பிளாக் கல் பதிக்கவும், பொதுப்பணித்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
புதுப்பொலிவோடு ரோடுகள்
காரைக்குடியில் கல்லூரி சாலையிலிருந்து, மகர்நோன்பு பொட்டல் வரை செல்லும் ரோட்டின், மணல் குவியல் அகற்றப்பட்டு, குண்டும், குழியுமான இடங்கள் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் புதியதாக ரோடு போடப்பட்டு வருகிறது.
ரோட்டின் கரையோரங்களில், மணல் கொட்டப்பட்டு, வாகனங்கள் இடறாதவாறு, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காரைக்குடி கல்லூரி சாலை ஹெலிபேட் தளத்திலிருந்து, பொதுக்கூட்ட மேடை வரை"பளீச்' என காட்சி அளிக்கிறது.
மேடைக்கு ரூ 1கோடி செலவு
முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்யும் ஊர்களில் எல்லாம், ஒரே மாதிரியா, பொதுக் கூட்ட மேடை கட்டவேண்டுமாம். மேடை அமைக்க மட்டும், கட்சி மேலாளரிடம், வேட்பாளர், 85 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல இதர செலவுகளுக்கு, குறைந்தது, ரூ. 15 லட்சம் ரூபாய் செலவாகிறதாம்.
ஹெலிகாப்டர் பயணம்
தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள அனைத்து பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்வார். ஒவ்வொரு முறையும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பி விடுகிறார்.
ஏப்ரல் 21ல் நிறைவு
மார்ச் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 21ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். எப்படியோ வடக்கு வாஸ்து ஜெயலலிதாவிற்கு கை கொடுக்குமா? ரெட்போர்ட் எக்ஸ்பிரஸ் சரியான இடத்தை சென்று சேருமா என்பது மே 16ம் தேதி தெரிந்துவிடும்.