திருச்செந்தூரை தொடர்ந்து! ராமேஸ்வரத்தில் வரிசையில் நின்றிருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து பலி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் வரிசையில் நின்றிருந்த வடமாநில பக்தர் ராஜ்தாஸ் என்பவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜ்தாஸ். இவர் ஒரு சன்னியாசி, வயது 59. இவர் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கு வந்திருந்தார். அங்கு அதிகாலை வேளையில் செய்யப்படும் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வரிசையில் காத்திருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் 20 நிமிடங்களுக்கு முன்பே மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் உறவினர்கள் யாரும் வரவில்லை. தனியாகவே அவர் வந்தார் என கூறப்படுகிறது. இதனால் உடலை ஒப்படைக்க அவரது உறவினர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு ரூ 50 கட்டணமாக பெறப்படுகிறது என்கிறார்கள். சிலர் அது போல் கட்டணம் ஏதும் இல்லை என்கிறார்கள். எனவே இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. காலையில் தினந்தோறும் 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிக லிங்கத்திற்கு பூஜை செய்யப்படுகிறது.
அந்த நேரத்தில் மூலவரை யாரும் தரிசிக்க முடியாது. இந்த பூஜைக்கு பிறகு காலை 6 மணி முதல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஸ்படிக லிங்க பூஜை வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இதை தரிசனம் செய்து விட்டு புண்ணிய தீர்த்தத்தில் வழிபட வேண்டும். அப்போது பித்ரு சாபத்தில் இருந்து விடுபடலாம். பித்ருக்களின் ஆசிர்வாதத்துடன் சந்ததி பலத்துடன் வாழலாம் என்கிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலில் பக்தர் பலி
திருச்செந்தூர் கோயிலுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஓம்குமார் வந்திருந்தார். அவர் ஜவுளி வியாபாரி, தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர் ரூ 100 கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனத்திற்கு காத்திருந்தார்.
கடும் கூட்ட நெரிசல் காரணமாக காத்திருந்த அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கிய அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications