மதுரை: மேம்பாலத்தில் இருந்து குதித்த வட மாநில இளைஞர் சாவு
மதுரை: மதுரையில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வட மாநில இளைஞர் உயிரிழந்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலம். இந்த பாலத்தின் வளைவு மீது இன்று மாலை ஏறி நின்ற வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீயணைப்பு துறையினரும் பொது மக்களும் இணைந்து இளைஞரை காப்பாற்ற சுமார் ஒன்றரை மணி நேரமாக மேற்கொண்ட முயற்சி பலன் வீண் போனது. மேம்பாலத்தில் இருந்து குதித்த போது, மின்சார ரயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்ததால் வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.
இதன் பின்னர் உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இருப்பினும் அந்த இளைஞர் யார்? எங்கு வேலை பார்க்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.