வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அடித்து வெளுக்குமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மழையை தொடர்ந்து சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் குளிர் காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது.
மிதமான மழை
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
வட தமிழகத்தில் கனமழை
தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் குறைவு
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 3ம் கட்டம் நிறைவு பெற்ற நிலையில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 179 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 204 மி.மீ ஆகும்.
50% குறைவு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீத மழை குறைவாக பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.