சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: சாலைகளில் வெள்ளம்
சென்னை: வடகிழக்கு பருவமழை சென்னையில் தீவிரமடைந்துள்ளது. காலை முதல் சென்னையின் நகர்பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில்கனமழை கொட்டி வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அது வலுப்பெறாமல் தாழ்வுப் பகுதியாக மட்டுமே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை
தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். அதே நேரத்தில், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
சென்னையில் மழை
சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் ரமணன் தெரிவித்தார்.
சாரல் மழை
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் சற்றுப் பலமாக பெய்தது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பிற்பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் சாரலுடன் கூடிய மழை பெய்தது.
கனமழை தீவிரம்
இந்த நிலையில் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10.30 மணியளவில் திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது. மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், உள்ளிட்ட நகர் பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.
புறநகரில் வெள்ளம்
தாம்பரம், குரோம் பேட்டை, நிதானமாக கொட்டிய மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒருவார காலம் தாமதமாக தொடங்கினாலும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையின் குடிநீர் பிரச்சினை தீரும் என்று சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.