உலகில் எதுவும் சாத்தியமே... ரியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் உற்சாக பதிவு
சென்னை: இசையால் இந்திய இளைஞர்களின் உற்சாகத்தை தட்டி எழுப்பும் இசைப்புயல் ஏ.ஆர்.ராகுமான், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்களை உற்சாகப்படுத்த தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு.... என்ற தலைப்பில் அவர், வெளியிட்டுள்ள பதிவின் முழு விபரம்:
உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருகின்றன. அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாட்டை வழிநடத்த வலுவான தலைவர்கள் கிடைத்துள்ளனர்.
ஒன்றுபட்டு, சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே தக்க சமயம். நாட்டை வழிநடத்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தலைவர் நமக்கு கிடைத்திருப்பது இந்தியாவின் நற்பேறு. நமது மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இளைஞர்கள். அத்தகைய ஒரு இளமையான மக்களைக் கொண்ட ஒரு நாடு இது.
தற்போது இளைஞர்கள் உலக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் சரியான திசையை நோக்கி பயணிக்கிறது.
ஒரு விஷயம் மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவும் சாத்தியமே. உறுதியாக, விடாப்பிடியாக முயற்சித்தலே அவசியமான குணம் ஆகும்.
சிறிய விஷயங்களுக்காக உங்கள் மனதைப் பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர் கொள்ளலாம். அவை உங்களுக்குள் ஏற்படக் கூடியவை. அவற்றில் இருந்து மீண்டு வாருங்கள்.
இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ வெல்வது சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச் சிறந்த தரத்தினால் அவற்றையும் வெல்ல முடிந்திருக்கிறது. நமது திறமையை நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம் என்று தனது பதிவில் கூறியுள்ளார் ஏ.ஆர். ரகுமான்.