இல்லை, இல்லை, இல்லை: மகளிர் மாநாட்டில் ஸ்டாலினின் 'இல்லை' பேச்சு
காஞ்சிபுரம்: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இல்லை இல்லை இல்லை என்ற குரல் தான் கேட்கிறது. அதனால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று திமுக மகளிர் அணி சார்பில் நடந்த மாநாட்டில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படைப்பையில் உள்ள கரசங்காலில் திமுக மகளிர் அணி சார்பில் மதுவுக்கு எதிரான மகளிர் மாநாடு சனிக்கிழமை மாலை நடந்தது. மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ஸ்டாலின் பேசுகையில்,

ஜெயலலிதா
சுதந்திர தின உரை என்பது புனிதமானதாக இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை புனிதமானதாக இருந்ததா, இல்லை.

அண்டப் புழுகு
ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் கொஞ்சமாவது நேர்மை என்பது இருந்ததா?. அண்டப் புழுகு ஆகாசப் புழுகு போன்றே பேசியுள்ளார். அவர் பேச்சில் வேறு எதுவும் இல்லை.

மின்வெட்டு
தமிழகத்தில் 6 முதல் 7 மணிநேரம் வரை மின்வெட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் மின்வெட்டே இல்லை என்று தெரிவித்துள்ளார். நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டு இல்லா மாநிலமாக தமிழகத்தை ஆக்குவோம் என்று கூறினீர்களே, செய்தீர்களா?

மின் உற்பத்தி
மின் உற்பத்தியை பெருக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். புதிய மின் திட்டத்தை துவங்கி ஒரேயொரு மெகாவாட் மின்சாரத்தையாவது தயாரித்து மக்களுக்கு வழங்கியிருக்கிறீர்களா என்பதை தயவு செய்து சொல்லுங்கள்.

இல்லாமை
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிறார். லஞ்சம், ஊழல் தவிர மற்ற அனைத்தும் இல்லாமை தான். குடிக்க, விவசாயம் செய்ய நீர் இல்லை. நெல் கொள்முதலுக்கு உரிய மானியம் இல்லை. நெசவாளர்களுக்கு போதிய வசதி இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரி இல்லை. புதிய தொழிற்சாலைகள் வரவும் இல்லை, புதிய முதலீடுகள் செய்யப்படவும் இல்லை.

அமைச்சர்கள்
கோட்டையில் அமைச்சர்கள் இல்லை, முதல்வரே கோட்டைக்கு சரியாக வருவது இல்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இல்லை இல்லை இல்லை என்ற குரல் தான் கேட்கிறது. அதனால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications