வீட்டில் ஒன்றும் இல்லை… வெறும் கையோடுதான் ஐடி அதிகாரிகள் சென்றனராம்… சொல்கிறார் விஜயபாஸ்கர்
சென்னை: சென்னையில் இதுவரை ரூ.4.5 கோடி சிக்கியதாக வருமானவரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர். என்றாலும் தனது வீட்டில் இருந்து குறிப்பிடத் தகுந்த வகையில் பணமோ நகையோ கைப்பற்றப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று விடியற்காலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கிய ஆவணங்கள்
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் சிக்கின. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்கள்.

எம்எல்ஏ விடுதி
அதே போன்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறையில் வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

4.5 கோடி பறிமுதல்
வருமானவரித் துறை சோதனையில் மொத்தமாக 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவெல்லாம் நடைபெற்ற ஐடி ரெய்டில் இன்னும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

பணம், நகை
ஆனால், இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தன் வீட்டில் இருந்து பணம், நகை என எதனையும் அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்று கூறினார். மேலும், தனது சொந்த ஊரில் நடைபெற்ற சோதனையிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறினார்.

தொப்பி வெல்லும்
இதெல்லாம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை கெடுக்கும் நோக்கில் நடைபெற்றுள்ளது. இதற்கு அதிமுக அம்மா கட்சி அஞ்சாது என்று கூறினார். இன்னும் 3 நாட்களில் நடைபெற உள்ள தேர்தலில் தொப்பி சின்னமே வெற்றி பெரும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications