தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாகுமா?
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி வெளியிட இன்று கடைசி நாள் என உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ள போதிலும் இன்று அறிவிக்கை ஏதும் வெளியாகாது என தெரிகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிட இன்றுடன் கெடு முடியும் நிலையில் தேர்தல் தேதியை இன்று வெளியிட வாய்ப்பில்லை என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.
உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காலதாமதம்
எனினும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதமாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இந்நிலையில் திமுக தொடர்ந்த அந்த வழக்கின் மீது கடந்த 4-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
நவம்பர் 17-க்குள்...
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கும் அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
இன்று வெளியாகாது
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகாது என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தேர்தல் அறிவிப்பை வெளியிட உயர்நீதிமன்றம் இன்று வரை கெடு விதித்திருந்தது. எனினும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் உத்தரவு பொறுத்தே தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.
கால அவகாசம்
தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று கோரிக்கை விடுக்கும் என்றே தெரிகிறது.