பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது! திண்டுக்கல்லில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் நடவடிக்கை
மதுரை: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் (57) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.

கொலை முயற்சி வழக்கு மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சுகன்யா லாட்ஜில் குற்றவாளிகளான வரிச்சியூர் செல்வம், கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோர் மறைந்து இருந்துள்ளனர்.
இதனை அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்துள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையால் கேரளாவை சேர்ந்த சினோஜ் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜேஎம் 2ல் நடைபெற்று வந்தது. இதில் தொடர்ச்சியாக வரிச்சியூர் செல்வம் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் வரிச்சூர் செல்வத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, வத்தலகுண்டு பகுதியில் வைத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் வரிச்சூர் செல்வத்தை கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு வரிச்சூர் செல்வம் அழைத்து வரப்பட்டு, தற்போது, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து, நடமாடும் நகைக்கடைபோல நகைகளுடன் வலம் வரும் வரிச்சியூர் செல்வம் திருந்தி வாழ்ந்து வருவதாக கூறி வருகிறார். எனினும் சமீபத்தில் கூட கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தான், கோவை மாநகரில் கட்டப் பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.












Click it and Unblock the Notifications