சென்னையில் இட்லி மாவுக்கும் தீபாவளி ஆஃபர்.. முதல் பரிசு 10 கிராம் வெள்ளி காசு!
தீபாவளிக்கு மற்ற கடைகளுக்கு இணையாக சென்னையில் இட்லி மாவுக் கடை ஒன்று சலுகையை அறிவித்துள்ளது.
சென்னை : தீபாவளிக்கு மற்ற கடைகளுக்கு இணையாக சென்னையில் இட்லி மாவுக் கடை ஒன்று போட்டி போட்டு குலுக்கல் முறையிலான சலுகையை அறிவித்துள்ளது.
தீபாவளிக்காக ஆடை, ஆபரணங்களில் தள்ளுபடி அறிவித்த காலம் போய் இப்போது உள்ளாடை முதல் காலணி வரை அனைத்திற்கும் ஆஃபர் அறிவிக்கும் நவீன காலத்தில் நாம் இருக்கிறோம்.
இலவசம் என்ற வார்த்தையை வைத்து எப்படி அரசுகள் மக்களை கையில் வைத்துக் கொள்கின்றனரோ, அது போல தள்ளுபடி என்ற அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது விளம்பரங்களைச் செய்து வருகின்றனர் வணிக நிறுவனங்கள்.
அந்த வகையில் சென்னையில் இட்லி, தோசை மாவு கடை கூட அதிரடி விலை சலுகையை அறிவித்திருக்கிறது. இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாவு வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மாவு ரூ. 35, அரை கிலோ மாவு ரூ.20 என்று தான் விலை போடப்படிருக்கிறது. ஆனால் இதற்கு தரப்படும் பரிசுகள் என்ன தெரியுமா தினமும் முதல் பரிசாக 1 நபருக்கு 10 கிராம் வெள்ளி காசு, 20 நபருக்கு எவர்சில்வர் தாம்பூலம் தட்டு.
சில்வர் தட்டு 10 முதல் 2 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 10 கிராம் வெள்ளி இன்றைய விலையில் ரூ. 430. இப்படிப்பட்ட விலைச் சலுகையைத் தான் அந்த மாவுக்கடை அறிவித்துள்ளது. தீபாவளிக்கும் இட்லி, தோசை மாவுக் கடை கூட தள்ளுபடி, சலுகை அறிவிக்கும் உலகில் நாம் வாழ்கிறோமே என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.